Tuesday, July 28, 2009

துப்பாக்கி சரணம் கச்சாமி



துப்பாக்கி சரணம் கச்சாமி
-ரெஜின் ரோஸ்

பிரியமுள்ள எதிரிகளே.
இப்பொழுதாவது
உண்மையைச் சொல்லுங்கள்.

வானிலிருந்து மீண்ட
குண்டுகள் கிழித்துப் போட்ட
எங்கள் சதைத் துண்டுகள்
உங்கள் மேல்
படவேயில்லையா...

துப்பாக்கிகளின் நெருக்குதலில்
பீறிட்ட இரத்தம்
உங்கள் மேல் தெறிக்கவில்லையா..

பதுங்குகுழிகளில்
காடுகளுக்குகிடையில்
புதைக்கப்பட்ட எங்கள்
குழந்தைகளின் ஓலம்
உங்கள் உறக்கங்களை கலைக்கவில்லையா..

கண்மூடி கல்லாகி போன
சிங்கள புத்தனின் காதுகளில்
எங்கள்
ஒப்பாரி பாடல் கேட்கவில்லை..

எதிரிகளே நினைவிருக்கட்டும்..

நாங்கள் விழுந்து மடிந்த
எங்கள் தாய்மண்ணில்
ஒருநாள் நடக்கும்
நீதி விசாரணை.

நீதிபதிகளே நீங்கள்
குற்றவாளி கூண்டில்
நிறுத்தப்படுவீர்கள்...

நீதிபதி கண்மூடிய கறுப்புதுணி
உங்கள்
முகங்களை மூடும்.
நீங்கள் குண்டுகளால் வழிபட்ட
புத்தனின் கைகள்
தூக்கு கயிறாகும்.

அதுவரை..
குண்டுகள் வீசுங்கள்,
கூரைகள் மீது எங்கள்
குழந்தைகள் மீது முடிந்தால்
எங்கள் கல்லறைகள் மீது.

தம்மம்..
சரணம்..
கச்சாமி..
----

2 comments:

மழைக்காதலன் said...

தமிழர்களின் உயிர்களுக்கு காலம் பதில் சொல்லும்....

செம்மதி said...

வணக்கம்
கவிதை வலிக்கிறது.
...............செம்மதி..............