Saturday, September 19, 2009

மலம் தின்றுகொண்டிருக்கின்றது மனிதம்

மலம் தின்றுகொண்டிருக்கின்றது மனிதம்
- மலையன்

பிய்த்து எடுக்கப்பட்ட
நிர்வாணத்தின் மேல்
தோக்குகள் குறிகளாகப் பாய்ந்ததை சொன்னபோது
எரிக்கப்பட்ட உடல்களைத்
தின்கிறார்கள் என்ற உண்மையை எடுத்தெறிந்தபோது
நிலத்தை உழுது
உயிர்களை விதைக்கிறார்கள்
என்று கதறி தொண்டை கிழிந்தபோது
விரட்டிப் போயும்
நெஞ்சு காட்டிய எங்கள் பேனாவின்
முதுகுகளை துளைத்துச்சென்ற தோக்குகளை
நக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற போது
மிதந்து வந்த பிண அழுகலை இழுத்துப் போட்டு
பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள் என்ற போது
கருவறைகளை தோண்டிப் பார்க்கிறார்கள் என்றபோது
அப்பனையும் மகளையும்
அன்னையையும் மகனையும்
நிர்வாணப்படுத்துகிறார்கள் என்றபோது
ரோடுரோலர்களின் அடிகளும்
பொக்லின்களின் அடிகளும்
இரத்தச் சேற்றில் வழுக்கிச் செல்கின்றன என்றபோது
கொண்டு சென்ற உணவுகளிலும் மருந்துகளிலும்
ஒண்ணுக்கு இருக்கிறார்கள் என்றபோது

கை பொத்தி வாய் பொத்தி
மற்றதையும் பொத்திய
ஏ மலட்டுமனிதமே!
இன்னும் உயிரோடுதானிருக்கின்றாயா..?

------
09.09.2009

1 comment:

PROLETARIAN said...

YES

THERE IS NO HUMANITY IN THIS WORLD !

WE WILL STRUGGLE FOR IT !

WISHES COMRADE !