Friday, September 2, 2011

அணுஉலை = எதிர்காலத்தின் கல்லறை

கைத்தறிகள் கதவுகளாகி
ஓடிக்கொண்டிருக்கும்
ஓடத்தின் இசையில்
கைகளும் கால்களும்
கனத்து வெடிக்கட்டும்

தைத்து கிழிக்கப்பட்டு
தெரியும் வெளியில்
கூவி விற்கும் பெட்டிகளின்றி
நடுவீட்டுக்குள்
பதுங்கிக் கிடக்கட்டும்
வெறுமை

பச்சை வயல்களின்
கல்லறைகளாய் எழும்பி நிற்கும்
காளையும் கரடியும்
உடைந்து சிதறட்டும்

தாளா வெக்கை
உடலெங்கும்
கண்களாய் முளைக்கட்டும்

இருட்டு பெரும்காடாகி
குரல்வளைகளை
நெருக்கி உடைக்கட்டும்

ஏனெனில்
கல்லறை விளக்குக்கு
கரண்டு தேவையில்லை
-----
இரா. அரிகரசுதன்

No comments: