Friday, September 16, 2011

கூடங்குளம் உண்ணாவிரதப் போராட்டம்

எம் மக்கள் அங்கே
மயங்கி விழுந்து கொண்டிருக்கையில்
பொய்யை மலை மலையாய் வாரி இறைத்துக் கொண்டிருக்கும்
அணுசக்தி விஞ்ஞானிகளே அதிகாரிகளே உங்கள் இதயங்கள் என்ன
இரும்பால் ஆனாதா?
எம் கவிஞர்களின் வாயால் அறப்பாட்டு
வீசி எறியப்பட்டால் இந்த உலகமே தாங்காது?

வேண்டாம் என் அன்பு விஞ்ஞானிகளே
உங்கள் இதயத்தை கொஞ்சம் திறந்து வையுங்கள்
நீங்கள் உங்கள் மனைவியருடனும் காதலியருடனும்
களித்து பிறந்த பிறக்கப்போகிற
உம் குழந்தைகளுக்காகவும்தான்
போராடிக்கொண்டிருக்கிறோம் நாங்கள் என்பதை
ஏற்றுக் கொள்ளுங்கள்.


நீங்கள் உங்கள் பரிசோதனைகளை
பரிசோதித்து எங்களை மண்ணழித்துவிடாதீர்கள்
உங்கள் மௌனங்களை சற்று கலைத்து
சொல்லுங்கள்

நீங்கள் சொன்னால் யாரும் கேட்பர்
ஏனென்றால் நீங்கள் விஞ்ஞானிகள்
உண்மையையைச் சொல்லுங்கள்
நீங்கள் நம்புகின்ற இறைவனுக்காகவாவது
அல்லது நீங்கள் விரும்புகின்ற அறிவியலுக்காகவாவது
உண்மையாயிருங்கள்


இருபதாயிரவருட கதிர்வீச்சு
ஆபத்து அங்கே உறங்கிக்கிடக்கின்றது
என்கின்ற உண்மையை
மனிதனுக்காக மட்டுமல்ல
அனைத்து உயிர்களுக்கவும்
இந்த உலகிற்காகவும் எடுத்துச் சொல்லுங்கள்

சவால் விட்டுச் சொல்லுங்கள்
மின்சாரம்தானே
நாங்கள் சூரியனை பிழிந்து
தருகிறோம் என்று உரக்க கூறுங்கள்


பணம் என்ன பணம்
எம் மக்கள் உயிர்தான் அரிது
என்று அவர்கள் காதுகளில் விழும்படி
சொல்லுங்கள்

சொல்லிவிட்டு வாருங்கள்
இதோ எம்மக்கள் இருக்கும்
உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே
அல்ல எம் மக்களின் இதயத்திற்கு உள்ளே
உங்களுக்கு கோவில் கட்டி தருகிறோம்.

வருவீர்களா..? வருவீர்களா..?
----
இரா. அரிகரசுதன், 17.09.2011

No comments: